Friday, September 25, 2009

மவுனவெளி


பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்
நிரம்பி வழியும்
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்
ஆடை அணி உறவுகள் களைந்து
நிர்வாணமாய் பேசியது
நம் மவுனம்.

தொட்டுப்பார்த்துக்
களைத்துப்போனது
காற்று
மூடிக்கொண்டன
கருவறைக் கதவுகள்

யுகம் யுகமாய்
சிற்பியின் உளிகளுக்காய்
காத்திருக்கிறது
கடலடியில் கரும்பாறை
*
உடைந்த சிலை
சிதைந்த ஓவியம்
எரிந்த கரித்துண்டு
என்னைப் போலவே
எதையும் சொல்வதில்லை என
பூக்கள் வாடலாம்
பூமி வாடுவதில்லை.

*

செத்தப்பின்
உயிர்த்தெழுந்த
பரமப்பிதாவின்
கல்லறைச் சத்தியமாய்
வாசிக்கிறேன்.
'புதைந்து போன
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை"
ஆமென்.'

*

காத்திருந்ததாய்
கனவுக்கண்டதாய்
கவலைக் கொண்டதாய்
கண்ணீர்விட்டதாய்
கவிதை எழுதியதாய்
காணத்துடித்ததாய்
அன்று போலவே
இன்றும்
சொற்குப்பைகளுக்கு நடுவில்
தொலைந்து போன
வாழ்க்கையைத் தேடுகிறாய்
வார்த்தைகள் எட்டாத
பிரபஞ்சவீதியில்
காலத்தைத் தின்று செரித்த
நெருப்பாய்
எரிந்து கொண்டிருக்கிறது
நீ தூக்கிவீசிய
மவுனவெளி.

-------------

Friday, September 18, 2009

காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்









ஜெட் விமான ஓட்டிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் 08

செப்டம்பர் சென்னையிலிருந்து திட்டமிட்டபடி என்னால் மும்பை

வரமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற

தனியார் விமானங்கள் நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் கணக்கில்

பயணச்சீட்டு தொகையை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
10ஆம் தேதிக்குத்தான் ஏர் இந்தியாவில் இடம் கிடைத்தது.
எனவே 9/9/09ல் சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சிபுரம் கோபுர

தரிசனங்களுக்காக சென்று வந்தேன்.

சென்னையின் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்காத பத்து வருடம்

பின்னோக்கிய வட்டத்தில் காஞ்சிபுரம். சுட்டெரிக்கும் வெயில்.
பல்லி தரிசனம் கண்டால் செய்த பாவம் எல்லாம் கரைந்துவிடும்
என்று ஒரு கோவில்.. 2500 ஆண்டு பழமைவாய்ந்த மாமரமே
தலவிருட்சமாக இருக்கும் இன்னொரு கோவில், சிவனில்லாமல்
சக்தி மட்டுமே காமாட்சியாக காட்சியளிக்கும் தாய் வழிபாட்டின்

எச்சமாய் காமாட்சி அம்மன், எப்போதும் வெண்ணெய் நெடி கலந்து
புளிச்ச மோரின் வாசம் துளசி மணத்துடன் சேர்ந்து மணக்கும் பெருமாள்

கோவில்.. இப்படியாக கோவில்களின் நகரமாக சோழர் பல்லவர்

கட்டடக்கலையுடன் கவனிப்பாரின்றி சிலையாகிவிட்ட சிற்பங்கள்..
பக்தர்களின் பசியை மிகவும் அக்கறையுடன் வியாபாரமாக்கியிருக்கும்
சரவணபவனில் கை நனைத்துவிட்டு காஞ்சிபுரத்தில் நான் விரும்பிய

தரிசனத்தை நோக்கி பயணித்தேன்.

வண்டி ஓட்டுநருக்கு பெயர் தெரிந்திருந்தது. ஆனால் முகவரி

தெரியவில்லை. அருகிலிருந்த பெட்டிக்கடையில் விசாரித்தப் போது அவர்

சரியாக வழி சொன்னார். அதுவே அப்போது நிம்மதி கலந்த மகிழ்ச்சியைத்

தந்தது. ஒருவேளை அந்தப் பெட்டிக்கடைக்காரர் 'வழி தெரியாது' என்று

சொல்லியிருந்தால் அதிர்ச்சி என்னைத் தாக்கியிருக்கும். அந்த மாதிரி

அதிர்ச்சி ஏற்படவில்லை என்பதால் ஏற்பட்ட நிம்மதியும் பல வருடங்கள்
நான் பார்க்க விரும்பிய ஓரிடத்தைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியும்
கலந்த கலவை உணர்வுகள்.

நான் 30 வருடங்களுக்கு முன் முதன் முதலாக வாசித்த அறிஞர்

அண்ணா குறித்த புத்தகம் நினைவுக்கு வந்தது. முதல் பக்கத்திலேயே
காஞ்சி என்றால் அண்ணா என்ற கருத்து எழுதப்பட்டிருக்கும்.
அதற்கு கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவில் நடைபெற்ற உண்மைச்

சம்பவம் பேசப்பட்டிருக்கும்.

கிருபானந்தவாரியார் தன் சொற்பொழிவில் ஒவ்வொரு தளங்களின்

பெயரையும் சொல்ல சொல்ல கூடியிருந்தவர்கள் அந்தந்த தளங்களின்

மகான்கள் பெயரைச் சொன்னார்கள். அந்த வரிசையில் அவர் காஞ்சி

என்று சொன்னவுடன் கூட்டத்தினர் (அதுவும் ஆன்மிக சொற்பொழிவு

கூட்டத்தில்!) அண்ணா.. அண்ணா என்று ஒரே குரலில் ஒலித்ததாகப்

பதிவு செய்யப்பட்டிருந்தது. வாரியார் காஞ்சி என்றவுடன் காஞ்சி

காமக்கோடி பீடாதிபதியின் பெயரைத்தான் எதிர்பார்த்தார் என்றும் கூட்டம்

அண்ணா என்றவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவருக்கு ஏற்பட்டது

என்றும் கட்டுரையாளர் எழுதியிருந்தார்.. ( புத்தக ஆசிரியர் பெயரும்

தலைப்பும் நினைவில் இல்லை. )
காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தை நோக்கிப் பயணம் செய்தப் போது

இக்கருத்து மட்டும் நினைவில் வந்தது.

அண்ணாவின் பெயரைச் சொல்லி வளர்ந்துவிட்ட கட்சிகள்.. அண்ணாவின்
முகத்தைக்கூட அவர் நூற்றாண்டை முன்னிட்டு மட்டுமே

அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளில் இடம் கொடுக்கும் அவலத்தை நான்

உணர்ந்திருக்கிறேன். எனினும் இவ்வளவு மோசமாக தி.மு.க.வின்

ஆட்சியில் அதுவும் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவை ஒரு சடங்கு

போல கொண்டாடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ...

அங்கே நான் பார்த்த காட்சிகள்..

ஒரு பெண் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார். முகப்பில்

தலைவாசலுக்கு மேல் அண்ணாவின் புகைப்படத்தை ஆணி அடித்து

மாட்டிக்கொண்டிருந்தார்கள். அந்தப் புகைப்படத்தின் பிரேமுக்குள்

சின்னச்சின்ன மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த

மின்விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்த்தார்கள். அதுதவிர

அண்ணாவின் புத்தகங்கள் ஒரு சில கண்ணாடி அலமாரிக்குள் இருந்தன.
மலிவு விலைப் பதிப்பு புத்தகங்கள். அண்ணா பயன்படுத்திய மூக்கு

கண்ணாடி, எழுதும் இங்க் பேனா, இரண்டு பக்கத்தில் எழுத்துகள் மஙகிய
நிலையில் இருந்த அவர் நாட்குறிப்பு வைக்கப்பட்டிருந்தது. மற்றும்

அண்ணாவின் புகைப்படங்கள். 20 முதல் 30க்குள் இருக்கும். அனைத்து

புகைப்படங்களும் அந்தக் காலத்தில் தினத்தந்தியில் வந்த
சாதாரண வாசகனும் அறிந்த புகைப்படங்கள் தான். குறிப்பிட்டு சொல்லும்

படி எதுவுமில்லை. அண்ணாவையும் தி.மு.க.வையும் ஒன்றாக பார்க்கும்

சிலர் சொல்லக்கூடும்.. அண்ணா நூற்றாண்டை ஒட்டி அண்ணாவின்

இல்லம் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் அப்படி இருந்திருக்க்

கூடுமென. ஆனால் அங்கு வேறு எதுவும் இருந்ததற்கான

அடையாளங்கள் எதுவுமில்லை..!
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டிருந்தது. 10/09/1930 ..







"நாளை அண்ணாவின் திருமண நாள்"
என்று நினைத்துக் கொண்டே புகைப்படம் எடுத்தேன்.
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் நிறைய செய்திகளை இன்று

நமக்குத் தருகிறது. ( இது குறித்தும் எழுத வேண்டும்)


அண்ணாவின் இல்லத்தில் அரசு வைத்திருக்கும் அண்ணாவின் நினைவுப்

பொருட்களை விட அதிகமாக அந்தக் காலத்தில் அண்ணா சம்பந்தப்பட்ட
புகைப்படங்கள், புத்தகங்கள், கையொப்பமிட்ட கடிதங்கள் எங்கள் வீட்டில்

கூட இருந்தது. அண்ணாவை தன் அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட
எண்ணற்ற தம்பிமார்களின் இல்லங்களிலும் இருந்திருக்கும்.

இன்னொரு செய்தி.. அண்மையில் அண்ணாவின் திருவுருவம் பொதித்த

நாணயத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அண்ணா நூற்றாண்டு

நிறைவு விழாவில் தமிழக முதல்வரின் பேச்சு. 16/9/09 தினத்தந்தி

மும்பை பதிப்பில் முதல் பக்கம்.. கலைஞரின் பேச்சு ..
தினத்தந்தியை நம்பிவிடுவதற்கில்லை. கலைஞர் அண்ணா குறித்து

பேசியதை எடிட் செய்துவிட்டு மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி குறித்து

பேசியதை மட்டும் வெளியிட்டு விட்டார்களொ என்னவோ..!

எங்கள் மும்பையில் புறநகர் திமுக இலக்கிய அணி சார்பாக அண்ணா

நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி சட்டசபை உறுப்பினர் அப்பாவு சிறப்பு விருந்தினராக

கலந்து கொண்டார். அப்பாவு அவர்களின் அரசியல் வாழ்க்கையும் மக்கள்

பணியும் போற்றுதலுக்குரியதுதான். அதில் எனக்கும் கருத்து

வேறுபாடில்லை. ஆனால் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு விழாவாக

இல்லாமல் அப்பாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவாக தவிர்க்க

முடியாமல் தடம் மாறியதைக் கண்டேன். !


திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில்
தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்து போன உறவுகளை அல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்ட வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது என்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.

நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன் மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு-
பலகீனமாகிப் போன
உங்கள் பாசறையைக் கண்டு.-
வருத்தப்படுகிறேன்.


காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு..!!??

தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனை எத்தனைத்
தம்பியர்.!
அவர் அத்துனைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணிநேரமும்.
அண்ணாவின்
நூற்றாண்டு விழா திருவிழா கூட்டத்தில்
கவியரங்கம்
கருதரங்கம்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லோர் முகங்களும் வருகின்றன.
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்.
கைதட்டுகிறார்கள்.

காத்திருக்கிறேன்.
எப்போதாவது
காட்ட மாட்டார்களா?
அண்ணா பேசுவதை.!
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?
ஓரிரவு மட்டுமல்ல
அண்ணா நூற்றாண்டு திருவிழாவின்
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்..
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால்.

Thursday, August 13, 2009

சூரிய கிரகணம்


ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
பூமகளை ஆட்சிசெயும்
ஞாயிறு போற்றுதும்

கொலை கொள்ளை
இனவெறி
இனப்படுகொலை
எது நடந்தாலும்
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்..

ஜெய ஜெய ஜெய ஜெய
ஜெய ஜெய ஜெய ஜெய
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்

ஆர்ப்பரிக்கும் குரலோசையில்
தென்குமரி கருவறை
விழித்துக்கொண்ட தருணம்.......

விடியலைத் தொலைத்த
பதட்டத்தில்
ஆகாயத்தை அதிரவைக்கும்
சிறகுகளின் படபடப்பு
மயங்கித் திரியும்
அதிகாலைச் சேவல்கள்
இரவல் வெளிச்சமாய்
வாழ்ந்த வாழ்க்கையை
புரட்டிப்போடும்
பூமியின் நிலவு

சுட்டெரிக்கும்
சூரியக்கங்குகள்
எரித்துவிடக்கூடும்
அவள் இளமுலையை

ஹரிஓம் ஹரிஓம்
ஜெய ஜெய ஹரிஓம்
அச்சுறுத்துகிறது
அவன் எழுதிய
குருஷேத்திரம்

அடங்க மறுத்தலின்
அடையாளமாய்
ஆர்ப்பரிக்கும் தென்குமரி
ஒற்றைச் சிலம்புடன்
கொற்றவை
தீமிதிக்கிறாள்
ஓம் சக்தி ஓம் சக்தி
ஆதித்தாயே ஓம்சக்தி

சடச்சட சடவென
சரிந்து விழுகிறது
நிழலுக்கும் சொந்தம் கொண்டாடும்
உரிமையை இழந்த
சூரியக்குடைகள்.

'எல்லாம் தான் தான்'
அவன் எழுதிய
மறைமொழியை
மறுவாசிப்பு செய்யும்
மங்கையின் விழிகளில்
அவன் இழந்துப்போனது
தேர்கள் பவனிவந்த
பிரபஞ்ச வீதிகளை மட்டுமல்ல
பூமியில் பதிந்த
நிழல்களின் சுவடுகளையும் தான்.

கொற்றவைப் போற்றுதும்
கொற்றவைப் போற்றுதும்
பூமகளை வாழவைக்கும்
கொற்றவைப் போற்றுதும்
கொற்றவைப் போற்றுதும்..

--------------------------------------

Thursday, July 23, 2009

நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்



என் முதல் கவிதை நூல் - சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி
என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு, தலைகீழ்விகிதங்கள், சதுரங்ககுதிரை
மட்டுமே. மும்பையில் என்னையும் நாஞ்சிலாரையும் அறிந்த நண்பர்கள் நாஞ்சிலாரின் அணிந்துரைக்காக
என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அதன்பின் நானும் என் பணிகளுக்கு நடுவில் மறந்துப்போனேன்.
கவிதைகளையும் கவிதைகள் அனுப்பியதையும். சில மாதங்கள் கடந்து அவர் அணிந்துரையும் கடிதமும்
வந்தது. அணிந்துரை நாஞ்சிலாரின் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
அவர் தந்த அணிந்துரையை விட மிகவும் முக்கியமானது அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம்.

கானமுயலெய்த அம்பினில் யானைப் பிழைத்த
வேல் ஏந்தல் இனிது

என்று முடியும். அக்கடிதம். இன்றும் ஒவ்வொரு நூலும் அச்சில் வெளிவரும் போது நான் எடுத்து மீண்டும் மீண்டும்
வாசித்துக் கொள்ளும் ஒரு கடிதம் நாஞ்சிலாரின் கடிதம் தான்.
எங்காவது என் சிறுகதைகள், கவிதைகள் வாசித்தால் அதைப் பற்றி தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல
அதிலிருக்கும் குறைகளையும் தெளிவாக என்னிடம் சொல்லும் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ்ச்சிப்ப்படுத்தும்
தருணங்கள். மழையில் மிதந்த மும்பை, தீவிரவாதிகள் தாக்கிய மும்பை, குண்டுவெடிப்புகளில் காயப்பட்ட
மும்பை.. இப்படியாக மும்பையைப் பற்றிய செய்திகள் வாசிக்கப்படும் போதெல்லாம் அதைப் பற்றி
பேசியிருக்கிறார். பெரும்பாலும் கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது
சமூக அக்கறையுடன் மும்பை, மும்பை சார்ந்த செய்திகளைப் பேசியிருக்கிறார்.

அவர் குடும்பத்தில் அடுத்தடுத்து துயரச் செய்திகள் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டு பேசிய போது
'இனிமேல் குடிப்பதில்லை ' என்று முடிவு செய்திருப்பதாகவும் தனக்கென நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும்
சொன்ன குடும்பத்தலைவனைப் பார்த்தேன்.

ஓரளவு இன்று நாஞ்சில் நாடனின் படைப்புகளை முழுமையாக வாசித்திருக்கிறேன், அவரைப் பற்றியும்
அறிந்திருக்கிறேன் என்ற பின்புலத்தில் இன்று அவர் படைப்புகளை மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும்
ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாஞ்சிலாரின் படைப்புகளில் பெண் காதாபாத்திரங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? என்று
நண்பர் கே.ஆர்.மணி என்னிடம் கேட்டார். அப்போது தான் நாஞ்சிலார் படைப்புகளில் உலாவும்
பெண்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நாஞ்சில் நாடனா.. அவர் கதைத்தளம் முழுக்கவும் ஆண்களின் ஆக்கிரமிப்பு..ஆண்பார்வையில்
நகரும் கதைகள் என்பது புறந்தள்ள முடியாத உண்மை. நாஞ்சில்நாடன் தன் கதைகளில் பெண்ணியம்
பேசுவதாகவோ அல்லது பெண்விடுதலைப் பேசி தன்னை பெண் விடுதலையின் நாஞ்சில் தலைவனாகவோ
அடையாளம் காட்டிக்கொள்ளும் பம்மாத்துகளைச் செய்வதில்லை. நாஞ்சிலாரின் கதைகளின் ஊடாக
பயணிக்கும் போது நாம் சந்திக்கும் பெண்கள் மிகவும் சர்வசாதாரணமாக பெண்ணியத்தையும் பெண்விடுதலையையும்
பாட்டிவைத்தியம் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள்! அவர்களுக்கே உரிய நாஞ்சில் மொழி நடையில்
கதைக்கு மிகவும் தேவையான அளவு மட்டுமே கருத்துகள் தெளிக்கப்பட்டிருக்கும்.
எந்தக் கதையிலும் கதையை விட்டு விலகியோ துருத்திக்கொண்டொ அவர் பேசும் பெண்ணியம்
தனித்து நிற்பதில்லை. பெண்ணியம் மட்டும் அல்ல.. நாஞ்சில் நாடன் அவர் படைப்புகளில் பேசும் சமூக அரசியலும்
அப்படித்தான். நாஞ்சிலார் கதைகளில் சமூக அரசியல் பேசுகிறாரா ? என்று பலர் வியப்படையலாம்.
அவர் படைப்புகளின் ஊடாக நடத்தும் சமூக அரசியல் குறித்து கோவை ஞானி அவர்களும் மிகவும்
வியப்புடன் என்னிடம் பேசியிருக்கிறார். தனிக்கட்டுரையாக இது குறித்தும் எழுத வேண்டும்.

நாஞ்சிலாரின் முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள் முழுக்கவும் ஆணின் பார்வையில் நகரும் கதைதான்.
அதுவும் ஒரு 25, 27 வயது இளைஞனின் பார்வையில் வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் முதலில் அறிந்த ஆண் அவள் தந்தை. அவளுக்குத் திருமணமாகி
இன்னொருவன் மனைவியானப் பின் அவள் தன் கணவனை தன் தந்தையுடன் அதிகமாக ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.
அதிலும் குறிப்பாக ஆளுமையும் அதிகாரமும் கொண்ட தந்தையாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
இந்த ஒப்புமையின் ஏற்ற இறக்கங்களின் பாதிப்புகள் ஓர் ஆணின் பார்வையில் தலைகீழ் விகிதத்தில்
பேசப்படுகிறது. ஒரு பெண்ணின் பார்வையில் எதுவும் பேசப்படவில்லை.
இந்திராகாந்தியின் வாழ்க்கையில் தந்தை-கணவர் என்ற இருவருக்கும் நடுவில் அவர்
இழந்துப் போன வாழ்க்கையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரே கூட
இல்லஸ்டேட் வீக்லி பத்திரிகையில் ஒரு நேர்காணலில் இதைக் குறிப்பிடத் தான் செய்திருக்கிறார்.


நாஞ்சிலாரின் பெண்கள் சிலரின் முகம் தெரிவதில்லை. பலருக்கு தனிப்பட்ட எந்த அடையாளமும்
கிடையாது. தனிப்பட்ட கருத்துகளோ விருப்பு வெறுப்போ கூட கிடையாது.
'எச்சம்' சிறுகதையில் எல்லோரும் போனபின் செத்துப்ப்போன பலவேசம் பிள்ளையின் சிதைக்குப்
பக்கத்தில் வந்து தன் இரு பெண்குழந்தைகளுடன் நின்று அழுதுவிட்டு வாய்க்குள்ளேயே புலம்பிக்கொண்டு
போகும் உருவங்கள். முகம் தெரிவதில்லை, வார்த்தைகள் குறைப்பிரசவமாகிப் போகும் இடத்தில்
நாம் பார்க்கும் பெண்களின் மவுனத்தில் தான் கதையின் அதுவரை எழுதப்பட்ட அனைத்து சொற்களும்
மறுவாசிப்புக்குள்ளாகி கதையைக் கனப்படுத்துகின்றன.
அப்படித்தான் நாஞ்சிலாரின் சில பெண் கதைப்பாத்திரங்களும்,

மாமிசப்படைப்பு நாவலில் (பக் 71)
"இவனுகெல்லாம் எட்டு ஏக்கரும் பத்து ஏக்கரும் அம்மைக்கு வயத்திலேருந்து வர்ச்சிலேயே கூட கொண்டு வந்தானுகோ?
எவனோ எழுதி வச்சான்.. பெண்டாட்டியோ மகளொ பாக்கதுக்கு செவப்பா லெச்சனமா முலையும் தலையுமா
இருக்காளா? இன்னா நாப்பது கோட்டை விதப்பாடு..." என்று சொல்லும் போது பெண் என்னவாக பயன்படுத்தப்பட்டாள்
என்பதைக் காட்டுகிறார்.
இவருடைய பெண்களுக்கு ஆண் சமுதாயம் பெண்ணியல்புகளாக செதுக்கி வைத்திருக்கும் கற்பியல் குறித்த
கோட்பாடுகள் இல்லை. பெரும்பாலான பெண் கதைப்பாத்திரங்கள் அக்கா என்றும் மதனி என்றும்
அழைக்கப்படுகிறார்கள். அக்காவுடனும் மதனியுடனும் சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாலியல் உறவுகளைத் தின்று
செரித்து நிற்கும் ஆண்களுடன் முரண்படாமல் இசைந்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்.
உபாதை சிறுகதையில் வரும் பூமணி, தவசி சிறுகதையில் வரும் விசாலம், தலைகீழ் விகிதங்கள்
க்தைநாயகி இவர்கள் தான் விதிவிலக்கானவர்கள். அதிலும் குறிப்பாக உபாதை கதையின் பூமணி.
கங்காதரன் பிள்ளையிடம் வசமாக மாட்டிக்கொண்ட போதும் தன் சாதுர்யத்தால் அவரைத் தள்ளிவிட்டு
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள்.
தவசியில் வரும் விசாலம் கணவனால் கைவிடப்பட்டு குழந்தையுடன் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
வயிற்றுப்பசி தீர்க்க காத்திருக்கும் தவசி. இக்கதையில் கூட தவசியைப் பற்றிய காட்சிப்படிமம் நம்மை
அதிகம் சிந்திக்க வைக்கிறது.
"சற்றும் கவர்ச்சியின் சாயை அடிக்காத உடலமைப்பு. மேல்வரிசைப் பற்கள் முரண்பாடான கோணத்தில் இருக்கும்.
என்ன முயற்சி செய்தாலும் வாயை மூடவே முடியாது. கதவோ, திரையோதான் போட வேண்டியதிருக்கும்...
விசாலத்திடம் யாருக்கும் விளையாடத் தோன்றாது. அந்த சோகம் தங்கிய முகத்தைப் பார்க்கவே ஆகாது ஆண்களுக்கு"
இப்படிப்பட்ட விசாலம் தவசியாகி - பிச்சை எடுப்பதற்கு - காரணம் அவள் ஆண்களை ஈர்க்கவில்லை என்பதும்தான்.
"அழகே இல்லாததால் அவள் எனக்குத் தங்கை ஆகிவிட்டாள்" என்று வாசித்த புதுக்கவிதை வரிகள்
நினவுக்கு வருகிறது.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனால் தாம்பத்ய சுகம் அனுபவிக்க முடியாத பெண்கள்,
கணவனால் தாய்மை அடைய வாய்ப்பில்லாத பெண்கள் இவர் கதைகளில் சமூகம் விதித்திருக்கும்
ஒழுக்க கோட்பாடுகளை மீறியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால்
பெண் தன் கணவன் தவிர்த்து பிறிதொரு ஆணை விரும்புவதற்கும் உடலுறவுக்கு இசைவதற்கும்
மேற்கூறிய காரணங்களையே நாஞ்சிலார் தன் கதைத்தளத்தில் கையாண்டிருக்கிறார்.
இந்தக் காரணங்களை முன்வைப்பதன் மூலம் அக்கதைப் பாத்திரங்களின் செய்யல்பாடுகளை நேரிடையாக
நியாயப்படுத்திடவில்லை எனினும் வாசகனுக்கு அக்கதாபாத்திரங்கள் மீது வெறுப்பு ஏற்படுவதில்லை.

"கொடுக்கல் வாங்கல்; சிறுகதையில் வரும் பொன்னம்மை தானியலின் உடற்பரப்பை மேய்ந்து கொண்டிருப்பவள்.
அதுவும் அவன் மரத்தில் ஏறி நிற்கும் போது கீழே விழுந்தக் காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து
அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள். தார் பாய்ச்சிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தானியல் யோசிக்கும்
அளவுக்கு அவனையும் அவன் உடலையும் மேயக் காத்திருக்கும் பசு அவள்.

நாஞ்சிலார் அவர்கள் மங்கலம், குழூவுக்குறி, இடக்கரடக்கல் கட்டுரையில் பெண்
ஆண் உடல் மீது கொண்டிருக்கும் கவர்ச்சி குறித்தோ ஈர்ப்போ குறித்தோ ஏன் பதிவு செய்யவில்லை என்பதைப்
பற்றி சங்க இலக்கியம் தொட்டு கம்பன், கலம்பகம் வரை பேசியிருக்கிறார். நகக்குறி இடுதல் குறித்து எழுதும்போது
: பெண் எங்கு நகக்குறி இட்டாள்? யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. நகக்குறி போகட்டும். ஆண்குறி பற்றி
சங்கப் பரப்பில் குறிப்பேதும் உண்டா.." என்றெல்லாம் கேள்விகளை முன்வைக்கிறார். அவருடைய கதைமாந்தர்களில்
பொன்னம்மை தான் ஆண்குறியைப் பார்த்து ரசித்ததாக அல்லது ஏங்கியதாகக் காட்டப்படும் பெண். ஆனால்
பொன்னம்மை ஏன் இப்படி இருக்கிறாள் என்பதற்கு ஒரு காரணம் கதைப் போக்கில்சொல்லப்படுகிறது.
" முப்பது இருக்குமா? ஆனால் முப்பதுக்கு மதிக்க முடியாது. பிள்ளை குட்டி எதுவும் இல்லை என்பதாலோ
படை குதிரை போல்தான் இருக்கிறாள்!" (பக் 276)

பிள்ளை குட்டி இல்லாத பெண் என்ற ஓரு வரி நாஞ்சில் நாடன் அவள் செயல்களுக்கு சொல்லும் ஒரு காரணமாகவே
கருத வேண்டியுள்ளது.
அவளுக்கு குழந்தைகள் இருந்ததாக எழுதியிருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றி எந்தக் குறிப்பும்
எழுதாமல் விட்டிருக்கலாம். ஆனால் பொன்னம்மை பிள்ளைக் குட்டி இல்லாதவள் என்று எழுதுவதன் மூலம்
அறிந்தோ அறியாமலோ இப்படிப்பட்ட காரணங்களை பெண் பிறிதொரு ஆணை
விரும்புவதற்கான காரணங்களாக காட்டுவது ஏன்? இம்மாதிரியான காரணங்களே சமூக விதிவிலக்குகளுக்கான
விதிகள் ஆக்கப்படுவதை நாஞ்சில் நாடன் அவர்களும் நன்கு அறிவார்.
இந்தப் பொன்னம்மை தான் எட்டுத் திக்கும் மதயானையில் வரும் சுசிலா.
சுசிலாவும் இப்படித்தான் பேசுகிறாள்..
"எனக்கு வெலக்கம் வர்ற நாளு தப்பி இருவது நாளாச்சு.. முப்பிடார் அம்மன் கண்ணைத் தொறந்து பாத்திருக்கா,
பந்திரெண்டு வருசத்துக்குப் பொறவு. ஆணாலும் பெண்ணாலும் இது ஒனக்க பிள்ளை. .ஓர்மையிலே வச்சுக்கோ.."
என்று பூலிங்கத்திடம் சொல்கிறாள்.
12 வருட தாம்பத்ய வாழ்க்கையில் அவளுக்கு கணவன் மூலமாக குழந்தை இல்லை. அவள் பூலிங்கத்துடன்
கொண்ட உறவுக்கு இது ஒரு காரணமா?
இதே நாவலில் வரும் கோமதியும் கணவனால் ஒரு குழந்தைக்குத் தாயானப் பின் கைவிடப்பட்டவள்.
அவளுக்கு பூலிங்கத்துடன் உடலுறவு உண்டு. ஆனால் அவனுக்கு மனைவியாக வாழ விரும்பவில்லை.
குழ்ந்தை நீனாவுடன் அவளை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருந்தும் அவளால் அவனுடன் வாழ்க்கையை
தொடர முடிவதில்லை.
செம்பகத்தின் கணவனோ உடலுறவுக்கே தகுதியில்லாதவன். அதுவே பூலிங்கமும் செண்பகமும் இணைவதற்கான
வலுவான காரணமாக அமைந்துவிடுகிறது.
பெண்கள் அதிகமாக இடம் பெற்றுள்ள அவர் நாவலான எட்டுத்திக்கும் மதயானை நாஞ்சிலாரின் பெண் பாத்திரப்படைப்புகளின்
பல்வேறு முகங்களைக் காணும் தளமாக அமைந்திருப்பதுடன் பெண்ணியம் குறித்த பல்வேறு கருத்துகளைப்
போகிறப் போக்கில் சொல்வதற்கான தளமாகவும் அமைந்திருக்கிறது.

தாயின் நடத்தைச் சரியில்லை என்று தாயுடன் உறவு கொண்டவனைக் கொலை செய்த பரமுவிடம் பூலிங்கம்
கேட்கிறான்.. :" தப்பா ஒரு ஆள் ஒனக்க அம்மை மேலே கை போட்டிருந்தா கொடுக்கரிவாளை வச்சுக் கொத்திப்
போட்டிருக்க மாட்டாளா? ஆனா அவ அப்படிச் செய்யல்லே. அந்த ஆளு தப்பா நடக்கப் பாக்காண்ணு ஒங்க அப்பா
கிட்டே சொல்லல்லே.. இல்லியா? நீ எங்கிட்டே கோவப்படாம யோசிச்சுப்பாரு.. காசுக்காச்சுட்டி போகப்பட்ட பொம்பிளையா?
இல்லேல்லா? பின்னே எதுக்கு அவளும் உடை குடுத்தா?

............
இதெல்லாம் நம்ம கணக்கிலே ஆம்பிடாத விசயம்டே..

இங்கே பரமுவின் அம்மாவாக பெயரிலியாக காட்டப்படும் பெண்தான் எவ்வித காரணமும் சொல்லப்படாமல்
இன்னொரு ஆணிடம் உறவு கொண்டதாகக் காட்டப்படும் பெண் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,

"காவல், கற்பு, குலம், பெருமை என்ற சொற்கள் எல்லாம் மனித அகராதியில் என்று வந்து சேர்ந்தவை என்று
தெரியவில்லை.
சொற்கள் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்திருக்க வேண்டும். கரையான் புற்று வளர்வதைப்போல.
சொற்களுக்கு அச்சப்பட்டுப் பதுங்கித் திரியும் மனிதன், சொற்களைத் தூக்கித் தூர எறிய முடியாமல்,
சொற்களைச் சுமந்து திரியும், முகமூடியாய் அணிந்து திரியும், வெறுமனே வாயிலிட்டு வெற்றிலைப் பாக்குப்
போலக் குதப்பித்திரியும் மனிதன்.."

பூலிங்கம் குரலில் ஒலிக்கும் நாஞ்சில்நாடனின் குரல் இது.

குடும்பச்சுமையில் தன்னைக் கவனிக்காது நாற்பது வயதிலேயே உருவமற்று கட்டொழுங்கு இல்லாமல்
போகும் பெண்களைப் பற்றியும் பாபி கதைப் பாத்திரத்தின் மூலம் உணர்த்துகிறார் நாஞ்சில்நாடன்.

"தன் உடலைச் சீராக வைத்துக் கொள்வதிலும் சேட்டைக் கட்டியிருந்த தாம்பத்யக் கயிறு தழையாமல்
பார்த்துக் கொள்வதிலும் சாமர்த்தியம் போதவில்லை போலும். இந்தியக் குடும்பப் பெண்களுக்கு நாற்பத்தைந்து
வயதுக்குள்ளேயே எல்லாம் ஆடி அடங்கிவிடும் போலிருக்கிறது. பிறகு பெசரெட் செய்வதும் பெண் பிள்ளைகளுக்குச்
சீர் விடுவதும் பேரன் பேத்திகளைக் கொஞ்சுவதும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கேற்றுவதும் சனீசுவரனைச்
சுற்றுவதும் தான் வாழ்க்கை என்று ஆகிவிடும் போலும்" (பக் 71) என்கிறார்.

நாஞ்சில் நாடனின் கதைக்களம் நகரமாக இருக்கலாம். ஆனால் கதை மாந்தர்கள் அதிலும் குறிப்பாக
பெண்கள் நாஞ்சில் நாட்டு பெண்கள். அவர்கள் தனக்கென தனி அடையாளம் இல்லாதவர்கள். ஆண்களால்
வஞ்சிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் தனித்து விடப்பட்டவர்கள். ஆண் துணைக் கிடைக்கும் போது
நெருப்பில் பற்றிக்கொள்ளும் பஞ்சு போல எரிந்து போகிறவர்கள். எனினும் கற்பு, திருமண உறவு
என்று கற்பிக்கப்பட்டிருக்கும் சமூக விதிகளை வார்த்தைகளால் அல்ல தங்கள் வாழ்க்கையால்
வளைத்து போட்டு வாழக்கற்றுக் கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக வாய்திறந்து பேசுவதில்லை.
அவர்களின் மவுனங்களும் செயல்களுமே கதைக்களத்தில் ஆண் கதை மாந்தர்களின் முகத்தைக்
காட்டும் கண்ணாடிகளாகவும் இருக்கின்றன.

நாஞ்சில் நாடனின் பெண் கதைப் பாத்திரங்கள் பெரும்பாலும் அவர் தலைமுறையை/அவர் அம்மாவின் தலைமுறையைச்
சார்ந்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.
கதைப் போக்கில் கதைக்கான பிரச்ச்னை முடிச்சு அந்த தலைமுறைக்கான எண்ண ஓட்டத்தில்
அவிழ்க்கப்படுகிறது. அதே முடிச்சு இன்றைய பெண்ணிடம் கிடைத்திருந்தால் அவள் என்ன் செய்திருப்பாள்
நாஞ்சிலார் அவள் என்ன செய்வதாக நினைப்பார் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.

இன்றைய இளம் தலைமுறை பெண்களின் செயல்களும் பிரச்சனைகளுக்கு அவர்கள் எடுக்கும்
முடிவுகளும் நாஞ்சில் நாட்டிலும் மாறித்தானிருக்கும். அந்த மாற்றங்களை அவர் வருங்காலத்தில் பதிவு செய்ய
வேண்டும் என்பது என் போன்றவர்களின் எதிர்பார்ர்பும் விருப்பமும்.
"தாய் பயன்படுத்திய சொற்களை மனைவி பயன்படுத்தவில்லை, ஆனால் அறிந்திருந்தாள்,
மனைவி அறிந்த அச்சொற்களை மகள் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை" நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களுக்காக
வருத்தப்படும் நாஞ்சில்நாடன் இந்த மாற்றங்கள் வெறும் சொற்களில் மட்டும் நிகழவில்லை, வாழ்வியல்
வாழ்க்கை மதிப்பீடுகள் என்று பல்வேறு தளத்தில் நிகழ்ந்திருப்பதை பதிவு செய்ய வேண்டும்.

ஒரு மகனாக தந்தையாக, தனையனாக, நண்பனாக ஏன் தாத்தாவாகவும் அவரைச் சுற்றி இருக்கும்
பெண்களின் தலைமுறை சிந்தனை மாற்றங்களைப் பதிவு செய்வதன் மூலம் அவர் படைப்புகளின்
கதை மாந்தர்களின் தலைமுறை வட்டம் பூர்த்தி அடையும்.


நாஞ்சில் நாடன் பெண்ணிய விடுதலைக்காக பெண்ணியக்குரல் எழுப்ப தன் பெண் கதைப்பாத்திரங்களைப்
படைக்கவில்லை. ஆனால் அவரின் பொன்னம்மை, சுசிலா, கோமதி, பானு, செம்பகம், பேய்க்கொட்டு மதனி,
விசாலம், பூமணி , பரமுவின் அம்மா என்று பல்வேறு பெண்முகங்களைக் காட்டி அவரவர் செயல்களின் மூலம்
கதையை நகர்த்திச் செல்கிறார். ஆனால் அதிகமாக அந்தந்த பெண் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்கள்,
உணர்வுகள் குறித்து பேசவில்லை, பெரும்பாலும் அவர்களுக்காகவும் அவர்கள் குறித்தும் பேசுவதும்
கதையின் ஆண் கதை மாந்தர்களாகவே இருப்பது ஆண் பார்வையில் சித்தரிக்கப்படும் பெண் கதை
மாந்தர்கள் என்று சொல்வதற்கே இடமளிக்கிறது.
நாஞ்சிலார் அவர்களே சொவ்லது போல எந்த ஒரு செயலுக்கும் இரண்டு பார்வைகள் உண்டு.
வண்டிக்காரனின் பார்வையில் பேசப்படுவது மட்டுமல்ல. வண்டியை இழுக்கும் மாடுகளின் பார்வையிலும்
பேசப்பட வேண்டும் என்பார்., அதையே தான் அவர் படைத்திருக்கும் பெண் கதைப் பாத்திரங்களுக்கும்
பொருத்திப் பார்க்கிறேன்.
விசாலம் கதையில் பேசவே இல்லை. பேசியிருந்தால் கைக்குழந்தைக்குப் பசி தீர்க்க பிச்சை எடுப்பதை
" தவசி" என்று சொல்லத் துணிவாளா? அல்லது தன்னை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை - இச்சமூகத்தை
அரக்கர்கள் என்று அடையாளம் காட்டுவாளா?
சுசிலாவுக்கு தனக்கு தாய் அந்தஸ்த்துக் கிடைக்கிறது.
ஆண் துணையின்றி வாழும் கோமதியின் வறண்ட நிலத்தில் அவன் மழையாகும் போது
அவளுக்கு அந்த ஈரம் தேவைப்படுகிறது.
செம்பகத்தின் கணவன் தாம்பத்ய உறவுக்கு லாயக்கில்லாத அவலம்தான் அவளை பூலிங்கத்தின்
தோள்களில் சரிந்து விடச் செய்கிறது.
அப்படியானால் ஆண்-பெண் ஈர்ப்பு, உடலுறவுகளுக்கு இவை மட்டுமே காரணமா என்றால் இல்லை.
இக்காரணங்களைத் தாண்டிய ஆண்-பெண் உறவுகளை நாஞ்சிலார் தன் கதைக்களத்தில் பயன்படுத்தவில்லை
என்பதை மட்டுமே இப்பொதைக்குச் சொல்லிக்கொள்ளலாம்.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஆண்-பெண் ஈர்ப்பு நிலைப் பற்றி சதுரங்க குதிரையில் ஒரு
சின்னக்கோடு வரையப்பட்டிருக்கும். அவர் படைப்புகளில் வாழும் மற்ற பெண்களுக்கு
அம்மாதிரியான மன உணர்வுகள் இருந்திருக்கும் என்பதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு ஆண் கதை
மாந்தரும் யோசிக்கவே இல்லை.
சுசிலா பூலிங்கத்தை மோகித்ததும் கோமதி பூலிங்கத்தை மோகித்ததும் வெறும் உடல் சார்ந்த தேவை
மட்டும்தானா? அவர்களின் பக்கம் இருந்த நியாயங்கள், உணர்வுகள் அனைத்துமே
ஆண் கதைமாந்தர்கள் மூலம் பேசப்படுவதால் வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட அகமனம் சார்ந்த ஆண்-பெண் ஈர்ப்புநிலை பேசப்படவே இல்லை.
பெண் ஆணை நாடுவதும் உடலுறவுக்கு இசைவதும் கதைகளில் சொல்லப்படும் காரணங்களாக
மட்டுமே இருக்குமானால் அது பெண்ணை எந்த வகையிலும் பெருமைப் படுத்தாது.
செம்பகம் பூலிங்கத்தை தவிர வேறு எந்த ஆணை அந்தச் சூழலில் சந்தித்திருந்தாலும் கூட
அவனுடன் ஓடிப்போயிருப்பாள் என்று கருத கதைக்களத்தில் நிறைய இடம் இருக்கிறது.
ஆண் உடலுறவுக்கான தேவை இருக்கும் போது பெண் அந்தச் சூழலில் சந்திக்கும்
எவனுடனும் உடலுறவுக்கொள்ள இசைவது போல காட்டுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதில்லை.
ஆண் மடியில் படுத்தவுடன் எந்தப் பெண்ணும் அடுத்தக்கட்டமாக உடலுறவுக்கு இடம் கொடுத்து
விடுவளா. ?
பல மாதங்கள் பட்டினிக்கிடந்தவன், தாகமாக இருந்தவன் பழைய கஞ்சியைக் கண்டதும்
எடுத்து குடித்து வாயைத் துடைத்துக்கொண்டு நிற்பது போல் பெண் உடலும் பெண் மனமும்
இருப்பதில்லை.
உடல் தேவைகளைத் தின்று செரித்து வாழ்ந்த ஆச்சிகளும் மதனிகளும் உண்டுதான்.

நாக்கில் எச்சில் ஊறும் நாஞ்சில் நாட்டு வகைவகையான சமையல்களைப் பற்றி புத்தகம் போடும் அளவுக்கு
எழுதக்கூடியவர் நாஞ்சில் நாடன். அப்போதெல்லாம் அந்த வகைவகையான சமையல்களைச் செயது பரிமாறும்
நாஞ்சில் நாட்டு வளைக்கரங்கள் இதைப்பற்றி எல்லாம் எழுதினால் என்ன எழுதி இருப்பார்கள் என்பதை
யோசித்துப் பார்க்கிறேன். வெறும் ருசி மட்டுமல்ல அந்த ருசிகளுக்குள் அவர்கள் இழந்துப் போன வாழ்க்கையின்
எத்தனையோ ருசிகரமான உணர்வுகள், ரகசியங்கள் வெளிவரலாம்.





மும்பையை மும்பை மக்களை தன்னுடம் தன் படைப்புகளுடனும் இணைத்து சீரஞ்சீவியாக
வாழ வைத்துக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்.

Friday, June 19, 2009

காணாமல் போன கடலலை

ஏழு கடல் தாண்டி
ஏழு மலைத் தாண்டி
ஒரு குகை.
ஒற்றைக்கண் அரக்கனின்
இமைகளில்லாத இரவுகள்
சிறகொடிந்த மைனாவாய்
சிறை எடுக்கப்பட்ட
எங்கள் இளவரசி
கனவுகளுடன் காத்திருக்கிறாள்
எப்படியும் வந்துவிடுவான்
பறக்கும் கம்பளத்தில்
பட்டத்து ராஜா என்று.

கடலை நிரப்பிக்
கட்டிடம் கட்டியதும்
மலையைக் குடைந்து
மரங்கள் மறைந்ததும்
அவள் கனவுகளில் காட்டும்
கண்ணாடிகளைத் தேடுங்கள்
கனவுகளின் கருக்கலைப்பில்
மரணம் சம்பவிக்குமென
மருத்துவர்கள் சொன்னதை
மறந்து விடாதீர்கள்.

கனவுகள் கட்டிய
கல்லறைக்குள்
காலம் அவளைப் புதைப்பதற்குள்
தோண்டி எடுத்து
காப்பாற்றி விடுங்கள்
அவள்
கனவுகளாவது
உயிர்ப் பிழைக்கட்டும்.

Monday, June 8, 2009

இந்தியக் கருவாடும் வெள்ளைப்பன்னிகளும்

பிரபலங்கள் எழுதும் பத்திகளை விட உங்களையும் என்னையும் போல
சாதாரண பொதுசனம் எழுதும் எழுத்துகளில் இருக்கும் பாசாங்கில்லாத சத்தியத்தின்
குரல் இப்போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பக்கங்கள்.
அப்படித்தான் 31மே2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பை பதிப்பில்
'சிக்கன் ஹலால்' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த பத்தி.
எழுதியவர் தன் பெயரைக்கூட "இந்தியக்குடிமகன்" - son of india
என்றுதான் அடையாளப்படுத்தி இருந்தார்.
http://epaper.timesofindia.com/Daily/skins/TOINEW/navigator.asp?Daily=TOIM&showST=true&login=default&AW=1244016793984



அவருக்கு ஏற்பட்ட அனுபவம் போல நம்மில் பலருக்கும் ஒவ்வொரு பயணத்திலும்
ஏற்பட்டிருக்கும். ஆனால் வழக்கம் போல கொதித்து அடங்கிவிடும்
பால் போல நாமும். அந்த நேரத்தில் ஆத்திரம் கொண்டு அதன் பின் அதை மறந்து
எப்போதும் போல இதெல்லாம் சகஜம்தான் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குள்
அடங்கிப்போகிறோம். அதற்கான காரண காரியங்களை நம்மில் பலர் யோசிப்பதில்லை.
(அதற்கெல்லாம் நமக்கு எங்கே நேரமிருக்கிறது என்கிறீர்களா?)

எல்லோரும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வானூர்தியில் வெள்ளைக்காரனுக்கு
மட்டும் தனிக்கவனமும் மரியாதையும் செலுத்தும் இயல்பு என்னவோ அந்த விமானப்பணிப்பெண்ணுக்கு
மட்டுமே இருப்பதாக நினைப்பது தவறு. நம் எல்லோரிடமும் எப்போதாவது அந்த உணர்வு, மனநிலை
இருக்கிறது. ரொம்பவும் இயல்பாகவே நம் எண்ணங்களில் கலந்திருக்கும் ஒரு மதிப்பீடு.
வெள்ளைக்காரன் உசத்தி.. கறுப்பன் தாழ்வு என்ற எண்ணம் தான்.
வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு சுற்றிப்பார்க்க வரும்போது அனுபவிக்கும் மேட்டுக்குடி
மரியாதையை எந்த ஓர் இந்தியனும் உலகில் வேறு எங்கும் அனுபவிக்கும் வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலியா, இலண்டன் என்று பல்வேறு நாடுகளில் இந்தியனுக்கு ஏற்படும் நிறவெறிக்
கொடுமைகளை அண்மையில் ஊடகங்கள் வழி அதிகம் தெரிந்து கொண்டிருப்பதும்
அன்றைய சூடான காலை காபி போல சூடானச் செய்தி.. அதற்குமேல் அதற்கான முக்கியத்துவம்
எதுவுமில்லை.

பாலின் வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம்.!
பால் போல ஒளீவீசும் நிலவின் அழகு.
என்பதை எல்லாம் உலக மொழிகள் அனைத்திலும் எழுதி வைத்து தலைமுறை தலைமுறையாய்
நம் எண்ணத்தில் விதைத்துவிட்டார்கள்.

இருளடர்ந்த கரிய மேகங்கள் அழகு
ஒளி நுழைய முடியாத அடர்ந்த வனம் அழகு
கரிய பாறையிலும் வளைந்து நிமிர்ந்து செங்குத்தாய் மண்ணின் மடிக்கிழித்து திமிறி நிற்கும்
மலைமுகடுகள் அழகு.. சுருள் கேசமும் தடித்த உதடுகளும் மின்னும் கண்களுமாய்ச் வெள்ளை நிறப் பல்
தெரிய பளிச்சென சிரிக்கும் ஆப்பிரிக்க குழந்தையும் அழகுதான்.

ஆனால் அழகு என்று சொன்னவுடன்
சிவந்த ரோஜாவும்
தூயமை என்றவுடன் வெள்ளை நிறமும் அடையாளமாய்
நம் எண்ணத்தில் கலந்திருப்பது எதனால்?
மாங்கொழுந்து நிறமுடைய கண்ணகியின் கொள்ளுப்பேரன்கள்
மணமகள் விளம்பரத்தில் எப்போதும் அழகானப் பெண் தேடும் வரிகளுக்குள்
ஒளிந்திருக்கிறது வெள்ளை நிறம் உசத்தி என்ற எண்ணத்தின் அடையாளம்.
அம்மாவும் அப்பாவும் அக்காவும் தங்கையும் கருப்பாக இருந்தாலும்
அதற்கான காரணங்கள் புரிந்தாலும்..
'fair good looking girl' தேடி அலைந்து கொண்டிருக்கும் திராவிட மண்ணின் மைந்தர்களை
நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?







கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு ..
என்ற பாடலைக்கூட ஓர் ஆண் பெண்ணைப் பார்த்து பாடுவதாகக் காட்டி இருந்தால்..!!??
ஹிட் ஆகியிருக்காது!!
அதையும் இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் சிவந்த பொன்னிற பெண் பாடியதால்தான்
பாடலும் ஹிட் ஆகியது. மக்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.

இம்மாதிரி கருத்துகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்/விற்பனைப் பொருட்களை
ஒரு 10 வருடங்கள் ஊடகங்கள் விலக்கி வைத்தாலே போதும்.. இந்த மாயையிலிருந்து
ஓரளவு வளரும் தலைமுறையாவது விடுபடும்.

Tuesday, May 26, 2009

வாழ்ந்ததை உணர்த்திய மரணம்


(1)
வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,
ருவண்டாவில், ருசியாவில்,
ஈரானில் ஈராக்கில்
இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம்..
நமக்கு வெறும் செய்தி.
சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு
தூக்கி எறிந்துவிடும் செய்தி.
உலகச் செய்திகளில்
வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி.
அதுவே இலங்கையில் நடந்தப்போது....
செய்திகள் வாழ்க்கையானது.
அவர்களின் முகம் தெரியாதுதான்.
தொடர்புகள் இல்லைதான். ஆனாலும்
அவர்கள் வாழ்க்கையில்
அவர்கள் போராட்டத்தில்
அவர்கள் ரத்தத்தில்
அவர்கள் வெற்றியில் அவர்கள் தோல்வியில்
நாமும் இருந்தோம். இருக்கிறொம்.
அவர்கள் வாழ்க்கை நம்முடையதாக இல்லை எனினும்
அவர்கள் மரணம் நம்முடையதானது.
பிறப்பில் தான் உறவுகள் நிச்சயிக்கப்படுவதாகவும்
தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,.
ஆனால்
அவர்கள் இறப்பில் தான்
அவர்களுக்கும் நமக்குமான உறவு நிலம் விளைந்தது.
அவர்கள் மரணத்தில் தான்
நாம் நம்மை நம் வாழ்க்கையை கற்றுக்கொண்டோம்.
அவர்களின் ரத்தம் தோய்ந்த போராட்டத்தின் கதைகளின் ஊடாகவே
நாம் போராளிகளின் முகங்களை வரைந்தோம்.
மண்ணம்பேரியும் கோணேஸ்வரியும்
நம் ஆதித்தாயின் புதல்வியர் என்பதை
உணர்ந்த தருணங்களில் தான்
முலைப் பிடுங்கி எறிந்த கண்ணகியின் ஆவேசத்தைக்
கற்பனையில்லை என்றுணர்ந்தோம்.
சுயம்புவாக முளைத்த பெண்ணியத்தை கோணேஸ்வரியின்
யோனியில் வெடித்த கிரனைட் வெடிச்சிதறல்கள் தான் நம்மில் விதைத்தன.

--
(2)


சித்திரவதை முகாம்களில்
காணாமல் போனவர்கள் பட்டியலில்
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டைநாயின் இரத்த நெடி
ரத்தக் கறைப்படிந்த சுவர்களில்
மனித ஆன்மாவின் சித்திரங்கள்.

கனவில் கத்திகள் பாய்ந்தக் கவிதைகளை
ரசிக்கும் படி எழுதிக்குவித்த
எம் கவிஞர்கள்
எப்போதும் எழுதியதில்லை
காலம் காலமாய்
வரப்போகும் தலைமுறை தலைமுறையாய்
நம்மை நம் சந்ததிகளைத்
துரத்திக்கொண்டிருக்கும்
மரணத்தின் ஓசையை.


(3)
மரணம் மட்டுமே அறிந்த
எம் விளைநிலத்தில்
குருதியின் நிறத்தில்
பூக்கும் மலர்களில் கூட
வீச்சமடிக்கும்
இனவாத எலும்புத்துண்டுகளின் வாடை.

எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல
உங்கள் குழந்தைகளும்
குழந்தைகளாக வளரவில்லை.
வெடிகுண்டுகளும்
பீரங்கி ஓசைகளும்
பாலூட்டிய
பதுங்குகுழிகளின்
மழலை விரல்களில்
பிறக்கும் போது
பதிந்துவிட்டது
ரத்தம் தோய்ந்த
வன்மத்தின் வாடை.

யுத்த வெறியில்
உன்மத்தம் பிடித்த
நாய்களுக்குத் தெரிவதில்லை
நடுவீட்டிலும்
புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகளின் காட்சி.
சிங்களத்தாயின் அடிவயிற்றிலும்
ஜனிக்கக்கூடும்
கம்சன்களை வதைச் செய்யும்
கண்ணனின் அவதாரம்.

-
(4)

மக்களின் மரணத்தை
கைதட்டிக் கொண்டாடியது ஒரு கூட்டம்
மனிதம் மரணித்து போனதை
மவுனமாக பதிவு செய்தது
அந்த நீண்ட இரவு.

தப்பித்ததாக சொன்னார்கள்.
நலமாக இருப்பதாக
நம்பிக்கையுடன சொன்னார்கள்
இல்லை இல்லை
எல்லாம் முடிந்ததென்றும்
எரித்துவிட்டதாகவும்
சாம்பலைக் கூட
இந்தியக்கடலின் மடிநிறைக்க
கரைத்துவிட்டதாகவும்
காற்றில் கலந்துவிட்டதாகவும்
மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள்..

மரணத்தை மீறியும்
தனி மனிதர்களின் வளையத்தைத் தாண்டியும்
வாழ்க்கையும் உண்டு
போராட்டங்களும் உண்டு

தன் பெண்டு தன் பிள்ளை
தன் மனைவி தன்துணைவி
தன் பேரன் தன் சுற்றம்
இவர்களையே மந்திரிகளாக்கும்
வித்தைகள் அறிந்த
நம் தலைவர்கள்
அறிந்ததில்லை
நிலத்தடியில் உதிக்கும்
சூரியக்குஞ்சுகளை.

(கவிதை தலைப்பு - சங்கரியின் கவிதை "இருப்பும் இறப்பும்"
கவிதை வரிகள். தொகுப்பு : சொல்லாத சேதிகள்)