Friday, June 19, 2009

காணாமல் போன கடலலை

ஏழு கடல் தாண்டி
ஏழு மலைத் தாண்டி
ஒரு குகை.
ஒற்றைக்கண் அரக்கனின்
இமைகளில்லாத இரவுகள்
சிறகொடிந்த மைனாவாய்
சிறை எடுக்கப்பட்ட
எங்கள் இளவரசி
கனவுகளுடன் காத்திருக்கிறாள்
எப்படியும் வந்துவிடுவான்
பறக்கும் கம்பளத்தில்
பட்டத்து ராஜா என்று.

கடலை நிரப்பிக்
கட்டிடம் கட்டியதும்
மலையைக் குடைந்து
மரங்கள் மறைந்ததும்
அவள் கனவுகளில் காட்டும்
கண்ணாடிகளைத் தேடுங்கள்
கனவுகளின் கருக்கலைப்பில்
மரணம் சம்பவிக்குமென
மருத்துவர்கள் சொன்னதை
மறந்து விடாதீர்கள்.

கனவுகள் கட்டிய
கல்லறைக்குள்
காலம் அவளைப் புதைப்பதற்குள்
தோண்டி எடுத்து
காப்பாற்றி விடுங்கள்
அவள்
கனவுகளாவது
உயிர்ப் பிழைக்கட்டும்.

Monday, June 8, 2009

இந்தியக் கருவாடும் வெள்ளைப்பன்னிகளும்

பிரபலங்கள் எழுதும் பத்திகளை விட உங்களையும் என்னையும் போல
சாதாரண பொதுசனம் எழுதும் எழுத்துகளில் இருக்கும் பாசாங்கில்லாத சத்தியத்தின்
குரல் இப்போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பக்கங்கள்.
அப்படித்தான் 31மே2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பை பதிப்பில்
'சிக்கன் ஹலால்' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த பத்தி.
எழுதியவர் தன் பெயரைக்கூட "இந்தியக்குடிமகன்" - son of india
என்றுதான் அடையாளப்படுத்தி இருந்தார்.
http://epaper.timesofindia.com/Daily/skins/TOINEW/navigator.asp?Daily=TOIM&showST=true&login=default&AW=1244016793984



அவருக்கு ஏற்பட்ட அனுபவம் போல நம்மில் பலருக்கும் ஒவ்வொரு பயணத்திலும்
ஏற்பட்டிருக்கும். ஆனால் வழக்கம் போல கொதித்து அடங்கிவிடும்
பால் போல நாமும். அந்த நேரத்தில் ஆத்திரம் கொண்டு அதன் பின் அதை மறந்து
எப்போதும் போல இதெல்லாம் சகஜம்தான் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குள்
அடங்கிப்போகிறோம். அதற்கான காரண காரியங்களை நம்மில் பலர் யோசிப்பதில்லை.
(அதற்கெல்லாம் நமக்கு எங்கே நேரமிருக்கிறது என்கிறீர்களா?)

எல்லோரும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வானூர்தியில் வெள்ளைக்காரனுக்கு
மட்டும் தனிக்கவனமும் மரியாதையும் செலுத்தும் இயல்பு என்னவோ அந்த விமானப்பணிப்பெண்ணுக்கு
மட்டுமே இருப்பதாக நினைப்பது தவறு. நம் எல்லோரிடமும் எப்போதாவது அந்த உணர்வு, மனநிலை
இருக்கிறது. ரொம்பவும் இயல்பாகவே நம் எண்ணங்களில் கலந்திருக்கும் ஒரு மதிப்பீடு.
வெள்ளைக்காரன் உசத்தி.. கறுப்பன் தாழ்வு என்ற எண்ணம் தான்.
வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு சுற்றிப்பார்க்க வரும்போது அனுபவிக்கும் மேட்டுக்குடி
மரியாதையை எந்த ஓர் இந்தியனும் உலகில் வேறு எங்கும் அனுபவிக்கும் வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலியா, இலண்டன் என்று பல்வேறு நாடுகளில் இந்தியனுக்கு ஏற்படும் நிறவெறிக்
கொடுமைகளை அண்மையில் ஊடகங்கள் வழி அதிகம் தெரிந்து கொண்டிருப்பதும்
அன்றைய சூடான காலை காபி போல சூடானச் செய்தி.. அதற்குமேல் அதற்கான முக்கியத்துவம்
எதுவுமில்லை.

பாலின் வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம்.!
பால் போல ஒளீவீசும் நிலவின் அழகு.
என்பதை எல்லாம் உலக மொழிகள் அனைத்திலும் எழுதி வைத்து தலைமுறை தலைமுறையாய்
நம் எண்ணத்தில் விதைத்துவிட்டார்கள்.

இருளடர்ந்த கரிய மேகங்கள் அழகு
ஒளி நுழைய முடியாத அடர்ந்த வனம் அழகு
கரிய பாறையிலும் வளைந்து நிமிர்ந்து செங்குத்தாய் மண்ணின் மடிக்கிழித்து திமிறி நிற்கும்
மலைமுகடுகள் அழகு.. சுருள் கேசமும் தடித்த உதடுகளும் மின்னும் கண்களுமாய்ச் வெள்ளை நிறப் பல்
தெரிய பளிச்சென சிரிக்கும் ஆப்பிரிக்க குழந்தையும் அழகுதான்.

ஆனால் அழகு என்று சொன்னவுடன்
சிவந்த ரோஜாவும்
தூயமை என்றவுடன் வெள்ளை நிறமும் அடையாளமாய்
நம் எண்ணத்தில் கலந்திருப்பது எதனால்?
மாங்கொழுந்து நிறமுடைய கண்ணகியின் கொள்ளுப்பேரன்கள்
மணமகள் விளம்பரத்தில் எப்போதும் அழகானப் பெண் தேடும் வரிகளுக்குள்
ஒளிந்திருக்கிறது வெள்ளை நிறம் உசத்தி என்ற எண்ணத்தின் அடையாளம்.
அம்மாவும் அப்பாவும் அக்காவும் தங்கையும் கருப்பாக இருந்தாலும்
அதற்கான காரணங்கள் புரிந்தாலும்..
'fair good looking girl' தேடி அலைந்து கொண்டிருக்கும் திராவிட மண்ணின் மைந்தர்களை
நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?







கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு ..
என்ற பாடலைக்கூட ஓர் ஆண் பெண்ணைப் பார்த்து பாடுவதாகக் காட்டி இருந்தால்..!!??
ஹிட் ஆகியிருக்காது!!
அதையும் இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் சிவந்த பொன்னிற பெண் பாடியதால்தான்
பாடலும் ஹிட் ஆகியது. மக்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.

இம்மாதிரி கருத்துகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்/விற்பனைப் பொருட்களை
ஒரு 10 வருடங்கள் ஊடகங்கள் விலக்கி வைத்தாலே போதும்.. இந்த மாயையிலிருந்து
ஓரளவு வளரும் தலைமுறையாவது விடுபடும்.

Tuesday, May 26, 2009

வாழ்ந்ததை உணர்த்திய மரணம்


(1)
வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,
ருவண்டாவில், ருசியாவில்,
ஈரானில் ஈராக்கில்
இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம்..
நமக்கு வெறும் செய்தி.
சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு
தூக்கி எறிந்துவிடும் செய்தி.
உலகச் செய்திகளில்
வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி.
அதுவே இலங்கையில் நடந்தப்போது....
செய்திகள் வாழ்க்கையானது.
அவர்களின் முகம் தெரியாதுதான்.
தொடர்புகள் இல்லைதான். ஆனாலும்
அவர்கள் வாழ்க்கையில்
அவர்கள் போராட்டத்தில்
அவர்கள் ரத்தத்தில்
அவர்கள் வெற்றியில் அவர்கள் தோல்வியில்
நாமும் இருந்தோம். இருக்கிறொம்.
அவர்கள் வாழ்க்கை நம்முடையதாக இல்லை எனினும்
அவர்கள் மரணம் நம்முடையதானது.
பிறப்பில் தான் உறவுகள் நிச்சயிக்கப்படுவதாகவும்
தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,.
ஆனால்
அவர்கள் இறப்பில் தான்
அவர்களுக்கும் நமக்குமான உறவு நிலம் விளைந்தது.
அவர்கள் மரணத்தில் தான்
நாம் நம்மை நம் வாழ்க்கையை கற்றுக்கொண்டோம்.
அவர்களின் ரத்தம் தோய்ந்த போராட்டத்தின் கதைகளின் ஊடாகவே
நாம் போராளிகளின் முகங்களை வரைந்தோம்.
மண்ணம்பேரியும் கோணேஸ்வரியும்
நம் ஆதித்தாயின் புதல்வியர் என்பதை
உணர்ந்த தருணங்களில் தான்
முலைப் பிடுங்கி எறிந்த கண்ணகியின் ஆவேசத்தைக்
கற்பனையில்லை என்றுணர்ந்தோம்.
சுயம்புவாக முளைத்த பெண்ணியத்தை கோணேஸ்வரியின்
யோனியில் வெடித்த கிரனைட் வெடிச்சிதறல்கள் தான் நம்மில் விதைத்தன.

--
(2)


சித்திரவதை முகாம்களில்
காணாமல் போனவர்கள் பட்டியலில்
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டைநாயின் இரத்த நெடி
ரத்தக் கறைப்படிந்த சுவர்களில்
மனித ஆன்மாவின் சித்திரங்கள்.

கனவில் கத்திகள் பாய்ந்தக் கவிதைகளை
ரசிக்கும் படி எழுதிக்குவித்த
எம் கவிஞர்கள்
எப்போதும் எழுதியதில்லை
காலம் காலமாய்
வரப்போகும் தலைமுறை தலைமுறையாய்
நம்மை நம் சந்ததிகளைத்
துரத்திக்கொண்டிருக்கும்
மரணத்தின் ஓசையை.


(3)
மரணம் மட்டுமே அறிந்த
எம் விளைநிலத்தில்
குருதியின் நிறத்தில்
பூக்கும் மலர்களில் கூட
வீச்சமடிக்கும்
இனவாத எலும்புத்துண்டுகளின் வாடை.

எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல
உங்கள் குழந்தைகளும்
குழந்தைகளாக வளரவில்லை.
வெடிகுண்டுகளும்
பீரங்கி ஓசைகளும்
பாலூட்டிய
பதுங்குகுழிகளின்
மழலை விரல்களில்
பிறக்கும் போது
பதிந்துவிட்டது
ரத்தம் தோய்ந்த
வன்மத்தின் வாடை.

யுத்த வெறியில்
உன்மத்தம் பிடித்த
நாய்களுக்குத் தெரிவதில்லை
நடுவீட்டிலும்
புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகளின் காட்சி.
சிங்களத்தாயின் அடிவயிற்றிலும்
ஜனிக்கக்கூடும்
கம்சன்களை வதைச் செய்யும்
கண்ணனின் அவதாரம்.

-
(4)

மக்களின் மரணத்தை
கைதட்டிக் கொண்டாடியது ஒரு கூட்டம்
மனிதம் மரணித்து போனதை
மவுனமாக பதிவு செய்தது
அந்த நீண்ட இரவு.

தப்பித்ததாக சொன்னார்கள்.
நலமாக இருப்பதாக
நம்பிக்கையுடன சொன்னார்கள்
இல்லை இல்லை
எல்லாம் முடிந்ததென்றும்
எரித்துவிட்டதாகவும்
சாம்பலைக் கூட
இந்தியக்கடலின் மடிநிறைக்க
கரைத்துவிட்டதாகவும்
காற்றில் கலந்துவிட்டதாகவும்
மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள்..

மரணத்தை மீறியும்
தனி மனிதர்களின் வளையத்தைத் தாண்டியும்
வாழ்க்கையும் உண்டு
போராட்டங்களும் உண்டு

தன் பெண்டு தன் பிள்ளை
தன் மனைவி தன்துணைவி
தன் பேரன் தன் சுற்றம்
இவர்களையே மந்திரிகளாக்கும்
வித்தைகள் அறிந்த
நம் தலைவர்கள்
அறிந்ததில்லை
நிலத்தடியில் உதிக்கும்
சூரியக்குஞ்சுகளை.

(கவிதை தலைப்பு - சங்கரியின் கவிதை "இருப்பும் இறப்பும்"
கவிதை வரிகள். தொகுப்பு : சொல்லாத சேதிகள்)

Tuesday, May 5, 2009

நகம்




விதம் விதமாக
வண்ணம் பூசி
அழகுப்பார்த்த காரணத்தாலேயே
வெட்டாமல் இருக்க வேண்டும்
என்பதல்ல.
கவனமாக வெட்ட வேண்டும்.
ஆழமாக வெட்டினால்
ரத்தக்கசிவு வரலாம்
கவனிக்காமல் விட்டுவிட்டால்
வீங்கி சீழ்ப்பிடித்து
விண் விண் என்று
வலி கொடுக்கும்
பிராண அவஸ்தையை
அனுபவிக்க வேண்டிவரும்.


வளர்ப்பது தற்காப்புக்கு
என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம்
வளர்ந்து வளைந்திருக்கும்
இடுக்குகளில்
தங்கிவிடுகிறது
தேடிவந்த அழுக்கும்
தேகத்தின் அழுக்கும்.
சமைப்பது சாப்பிடுவது
அழுக்குகள் சேர்த்துதான்
என்றாலும்
பழகிவிட்டது
இரப்பையும்
இறைப்பையும்.


இரவில் வெட்டினால்
தரித்திரம் என்று
பாட்டி சொன்னதையே
அம்மாவும் மறக்காமல்
சொல்கிறாள்.

வெட்ட வெட்ட வளருமாம்
உன் நினைவுகளைப் போலவே
நகமும் .
செத்த உடம்பிலும்
நகம் வளருமாமே
சொல்லுகிறார்கள்
உண்மையா?
அதனால்தான் உயில் எழுதுகிறேன்
விரல்களைப் புதைக்காதீர்கள்
எரித்துவிடுங்கள் என்று.

---------------

Wednesday, April 29, 2009

சென்னைத்தமிழ்




குப்பத்து மொழியும் சில குழப்பங்களும்






அன்பின் Pudiyamadavi





தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில் கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது).





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை அல்லவா?)



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து பாஷையிலிருந்து மருவியதா?



4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின் இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .



5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?



பாண்டித்துரை

சிங்கப்பூர்


http://pandiidurai.wordpress.com

சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்



அன்பினிய பாண்டித்துரை அவர்களுக்கு,
வணக்கம்.




தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும்

யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில்

கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு

சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா

நெடுநாளாக என்னுள் உள்ளது).

>> சிங்கப்பூர் வருகிற என்பதை மாற்றி மும்பை வருகிற என்றும்
சிங்கப்பூர் நூலக வாயிலில் என்பதை மும்பைத் தமிழ்ச்சங்க நூலக வாயிலில் என்றும் மாற்றிக்கொண்டால் ...
மும்பையிலும் இதே நிலைமைதான்!





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை.

இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக

இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது

சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை

அல்லவா?)

* குப்பத்து பாஷை என்ற உங்கள் சொல்வழக்கு புரிந்து கொள்ள எளிதாக இருந்தாலும் அது சரியல்ல என்பது என் கருத்து.
சென்னை வட்டார வழக்கு என்றோ சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சுமொழி என்றோ இருந்திருந்தால் சரியாக இருக்கும்.
முதலில் குப்பத்தில் வாழும் மக்கள் யார்?என்ற அறிந்து கொண்டால் சில முடிச்சுகள் அவிழும்.
அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர். உடல் உழைப்பு இழிவானதாக கருதப்படும் சமுதாயம் உழைப்பவர்களைத் ஊர்க்கோடியில்
ஒதுக்கி வைத்துள்ளது. தீண்டத்தாகதவர்கள் என்று ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சற்றொப்ப 2000 ஆண்டுகள் கல்வி இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களிடம்தான் தமிழ் தன் உயிர்ப்பை
இழந்துவிடாமல், புராண இதிகாச கற்பனைக்குக்குள் தன்னை இழந்துவிடாமல் தன் சுயமிழக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழை 2000- ஆண்டுகள் தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த குப்பத்து வாழ் தமிழர்கள் தான்.

சென்னை குடிசை வாழ் மக்களின் வழக்குத்தமிழ் இன்றொ நேற்றோ உருவானதல்ல.
ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாநகரம் உருவான காலகட்டத்தில் உடல் உழைப்புக்கான தேவையும்
வாய்ப்பும் சென்னையிலும் சென்னையைச் சுற்றி இருந்த இடங்களிலும் உருவான காலக்கட்டத்தில்
நம் கிராமப்புறங்களிலிருந்து வயிற்றுப்பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பெரும்பாலான
சென்னை குடிசை வாழ் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை - மெட்ராஸ் மாகாணமாக இருந்தப்போது
தெலுங்கர்களும் கன்னடர்களும் அதிகமாக சென்னையில் வசித்தார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால்
சென்னை தமிழ் உருவான வரலாறு ஒரளவு புரியவரும்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்பதாலும் பல்வேறு மாவட்ட தமிழ் வழக்கு மொழிகளும்
கலந்து ஓர் அவியல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

சென்னை மொழி மற்ற வட்டார வழக்குகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமானதாகவும் எதற்குள்ளும் அடைக்கமுடியாமல்
திமிறி நிற்கும் மாநகரக்குரலாகவும் இருப்பது இதனால்தான்.



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?

* வட்டார வழக்கில்வரும்.



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து

பாஷையிலிருந்து மருவியதா?

வழக்கம்போல மொழியும் பேசப்படும் மனிதர்களின் வர்க்க சாதி இட வேற்பாடுகளைச் சுமந்து கொண்டுதான் வருகிறது.
சென்னையில் பொதுவாக மேல்தட்டு மக்கள் பேசும் மொழி சமஸ்கிருதம் கலந்த/ஆங்கிலம் கலந்த தமிழாக இருக்க
குடிசைவாழ் மக்களின் பேச்சுதமிழ் முன்னதிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. மாறுபட்டது என்பதாலேயே கலப்படமில்லாத
தூயதமிழ் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் குடிசை வாழ் மக்களின் மொழிக்கலப்பு இயல்பானதாக அமைந்துள்ளது.
அவர்களுக்கே பிறமொழிச் சொல் என்பதெல்லாம் தெரியாது.






4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின்

இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .

* சாதிப்படிநிலை சமூகத்தில் உடல் உழைப்பு > ஏழ்மை > தீண்டாமை எல்லாம் நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை உன்னிப்பாக கவனித்தால்
குடிசைவாழ் பேச்சுமொழியை யார் எதற்காக இழிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதைப் புர்நிதுகொள்ள முடியும்.
பஞ்சமர் நாவல் எழுதிய ஈழத்து தமிழ் எழுத்தாளர் கே.டானியல் அவர்கள்

" ஈழத்துத் தமிழறிஞர் சிலரால் நையாண்டி செய்யப்படும் 'இழிசனர் வழக்கு'
மொழியிலேயே இந்த நாவலைச் செய்திருக்கிறேன். தமிழ்ச் சான்றோர் அன்னிய நாகரிகத்தில் மோகம் கொண்டு தமிழைச் சீரழித்தபோதும்,
ஏகாதிபத்திய அடிவருடிகள் தமிழை மறந்து மறுத்து நையாண்டி செய்த போதும் பண்டித வித்துவ பரம்பரையினர் தமிழன்னையை மூடி முக்காடிட்டு
இருள் சிறைக்குள் வைத்த போதும் தமிழ் அன்னையை சிறைமீட்டு தேறுதல் கூறிப் பாதுகாத்தவர்கள் இந்த பஞ்சமர் கூட்ட மக்களேயாகும்.
இவர்களே தமிழுக்கு எஜமானர்களுமாவர்கள். அதனால் அந்த எஜமானர்கள் பேசிய வழக்கையே தமிழென ஏற்று இதன் பாத்திரங்களுக்கு
பூரண சுதந்திரம் கொடுத்து இவர்களைப் பேச வைத்திருக்கிறேன்" என்றும்
"மக்களின் எதிரிகள் எதைப் பிழை என்கிறார்களோ அந்த அதுவே மிகவும் சரியானதாகும்" என்றும் சொல்லியிருப்பதையும் நினைவு படுத்த
விரும்புகிறேன்.

மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து நெல்லை கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். தொலைக்காட்சிகளில்
பட்டிமன்றங்கள், கம்பர் விழாக்களில் அவருடைய பேச்சை சில நேரங்களில் ரசித்தது உண்டு! ஏனவே அவருடைய பேச்சைக் கேட்க
போயிருந்தேன். அப்போது இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவரின் இசையையும் அவர்கள் சார்ந்த சாதி, மதம் கலந்து
அவர் நகைச்சுவை என்று பேசிய அபத்தம் என போன்றவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. அதுவரை அவர் மீதிருந்த மரியாதை
மறைந்து சில பிம்பம் உடைந்து போனது.


5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?

எந்த வட்டார வழக்குகளாலும் தமிழ் சிதைவுறுவதில்லை!


சில குறிப்புகள் :

> என் வாழ்விடம் மும்பை, என் சொந்தவூர் தமிழ்நாட்டின் தாமிரபரணி என்பதால் எனக்கும் சென்னைக்குமான தொடர்பு
மும்பைக்கும் சிங்கைக்குமான தொடர்புளவுதான். எனவே சென்னை குடிசைவாழ் மக்களின் மொழியுடனோ வாழ்க்கையுடனோ
எனக்கு அதிகத் தொடர்பில்லை. தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

> சென்னை வழக்கு மொழி குறித்த மேற்சொன்ன என் கருத்துகள் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவு மொழி சமூகம் சார்ந்த
பார்வையின் ஊடாக கண்ட ஒரு பருந்து பார்வை தான்.

> வட்டார வழக்கு மொழியின் தாக்கம் படிப்படியாக புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியக்கூறுகள்
இருக்கின்றன. இன்றைய தொலைக்காட்சி ஊடகம் அறிந்தோ அறியாமலோ அதைத்தான் செய்கிறது .

> பேச்சுதமிழில் கதைகள் எழுதும்போது என் போன்றவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
எல்லோரும் வட்டார மொழி வழக்கில் எழுதுவது போல என்னால் எழுத முடியுமா?
எங்கள் மும்பை டமிளரின் (தமிழரின்) பேச்சு மொழியில் சரளமாகக் கலந்துவிட்ட இந்தி, மராத்தி.குஜராத்தி
மொழிச்சொற்களைக் கலக்காமல் எப்படி எழுதுவது?
அதனால் தான் குறைந்தப்பட்சம் "அச்சா, நஹி, சலோ, க்யா, பானி, இத்தியாதி மினிகலப்புகளுடன்
என் கதைமாந்தர்களின் பேச்சுதமிழை எடிட்டிங் செய்கிறேன்.!

சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சு தமிழ், வட்டார வழக்குகள் குறித்து கொஞ்சம் யோசிப்பதற்கான
வாய்ப்பை உங்கள் மடல் கொடுத்துள்ளது. மிக்க நன்றி.

வாழ்த்துகளுடன்,

புதியமாதவி,
மும்பை.

Tuesday, April 28, 2009

காமெடி டைம்

கலைஞர் டி.வி.யில் அதிரடி காமெடி டைம்
--------------------------------------------





ஜெயா டி.வி.யில் அடிவருடி கலக்கல் காமெடி
---------------------------------------------


Thursday, April 23, 2009

விற்பனைக்காக விந்துவும் கருமுட்டையும்


Life is beautiful.. pass it on என்ற வாசகத்துடன் வளவளப்பான காகித அட்டையில் அச்சடிக்கப்பட்ட
துண்டறிக்கையை வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை.
க்ரையோஸ் இந்தியா - CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு விந்து - கருமுட்டை வங்கி.

டென்மார்க் தலைநகராகக் கொண்ட உலகின் மிகப்பெரிய விந்துவங்கி. அமெரிக்க ஐரோப்பிய
மருத்துவ சட்டத்திட்டங்கள், சுகாதார வழிமுறகளைப் பின்பற்றி இந்தியாவில் நுழைந்திருக்கும்
வங்கி.

குழந்தைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத தம்பதியர் வாழ்க்கையில் வசந்தத்தை
வழங்கும் தேவதைகள் / தேவதூதர்கள் நீங்கள்! எங்கோ யாருக்கோ தேவைப்படலாம் உங்கள்
விந்துவும் கருமுட்டையும். இம்மாதிரியான சமூக அக்கறை தொனிக்கும் வாசகங்கள்..நம்மை
யோசிக்க வைக்கிறது. கவர்ச்சிகரமான வரிகளைத் தாண்டி யோசிக்கும் போது அமெரிக்க ஐரோப்பிய
தாராளமயம் எதை எல்லாம் தாராளமயமாக்கி விற்பனைக்கான கடைச்சரக்காக நம் சந்தைக்குள்
நுழைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

போர்க்களத்தில் பணிபுரியும் வீரர்கள், இராசயணம், பூச்சிக்கொல்லி, கதிர்வீச்சு ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதில் வேலைச் செய்பவர்களுக்கும் தங்கள் வாரிசுகளை எப்போது
வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் உரிமையை இந்த வங்கிகளில் அவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் விந்துகளை சேமித்து வைப்பதன் மூலம் பெறமுடியும் என்பது
மகிழ்ச்சிக்குரியதுதான். அறிவியல் உலகத்தின் மிகச்சிறந்த பயன்பாடு என்றும் கொண்டாடலாம்தான்.
ஆனால் நடைமுறையில் இந்த வங்கிகளில் என்ன நடக்கிறது?

விந்து தானம் கொடுப்பவருக்கு 10 சாம்பிளுக்கு குறைந்தது ரூ.5000 முதல் 10,000 வரை!
கருமுட்டைக்கு விலை அதிகம். குறைந்தது ரூ 40,000 முதல் ரூ 60,000 வரை. வாடகைத்தாய்க்கோ
ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்க குறைந்தது 2 இலட்சத்திலிருந்து 3 இலட்சம் வரை .

தகுதிகள்:

*விந்து தானம் வழங்கும் ஆண் 18 வயதுக்கு மேல் 42 வயதுக்குட்பட்டவராய் இருக்க வேண்டும்.
* ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் தேவை.
* இரண்டு தலைமுறையின் மருத்துவக்குறிப்புகள் தேவை.
*தொடர்ந்து 6 முதல் 9 மாதங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது விந்து வங்கிக்கு வருகைத் தந்து
விந்துதானம் செய்ய தயாராய் இருக்க வேண்டும்.
*விந்துதானம் செய்வதற்கு முன் பாலியல் நோய்கள் (HIV & Hepatitis) மற்றும் பிற தொற்றுநோய்கள்
இருக்கிறதா என்றறியும் சோதனைக்கு உடன்பட வேண்டும்.
* விந்துதானம் செய்வதற்கான மேற்குரிய தகுதிகளுடன் இன்னும் சில விதிமுறைகள் அடங்கிய
ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.

விந்துதானம் வழங்கும் ஆணைப்போலவே கருமுட்டை தானம் வழங்கும் பெண்ணுக்கும்
*வயது 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
*ஏற்கனவே தாய்மை அடைந்தப் பெண்ணாக இருப்பது சிறப்புத்தகுதி!
*கருமுட்டை உற்பத்திக்கான ஹார்மோன் ஊசி மருந்துகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
*தொடர்ந்து இரு முறையாவது கருமுட்டை தானத்திற்கு உடன்பட வேண்டும்.
*கருமுட்டை தானத்திற்கான மருத்துவ முறைக்கு- மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மயக்க மருந்து கொடுத்தல், கருமுட்டையை எடுக்கும் மருத்துவமுறை - உடன்பட வேண்டும்.
*பாலியல் நோய்கள்/தொற்றுநோய்கள் அறியும் மருத்துவ சோதனைக்கு உடன்பட வேண்டும்.

வாடகைத்தாய்க்கும் மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் அவசியம். வயது வரம்பு 21 முதல் 35க்குள்.
இவைதவிர சம்பந்தப்பட்ட ஆண்/பெண் வாழ்க்கைத்துணையின் ஒப்புதலும் தேவை.

எது விற்பனைக்கு?
---------------------

பாக்கெட் மணி, ஆடம்பர இரவு விடுதி கேளிக்கைகள் இத்தியாதிகளில் மயங்கித்திரியும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் இம்மாதிரியான வங்கிகள் மின்மினிப்பூச்சிகளை
கவர்ந்திழுக்கும் விளக்குத்திரியாக இருக்கின்றன. பாக்கெட் மணிக்காக தன் நண்பன், பாட்டி தாத்தா
தம்பி தங்கை உறவுகளின் உயிருடனும் விளையாட துணியும் இன்றைய இளசுகள் விந்துவங்கியில்
கிடைக்கும் பணத்திற்காக அதிகமாக போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தவிசயத்திலும் ஆண்களைவிட அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான்.
மாதம் ஒரு முறைதான் கருமுட்டைகள் உற்பத்தி என்ற இயற்கையின் விதி. எனவேதான் கருமுட்டைகளுக்கான விலையும் விந்துகளின் விலையை விட பன்மடங்கு அதிகம். ஒவ்வொரு முறையும் கருமுட்டை தானம் செய்யும் போது மருத்துவக்கண்காணிப்பு தேவைப்படுகிறது.
அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ஓவேரியன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்பிரியா.
தீடிரென சரியத் தொடங்கியிருக்கும் பொருளாதரம், கணினி ப்பிபிஓ துறைகளின் ஆள்குறைப்பு
வேலை இழப்பு ஆகிய சூழல்கல் நிறைய இளம் பெண்களை கருமுட்டை தானம் செய்யும்
நிலைக்கு தள்ளி இருக்கிறது என்பதும் உண்மை.
வாடகைத்தாயாக இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய தமிழ்ச்சினிமா காட்சிகளும் பெண்ணுக்கு
ஏற்படும் குற்ற உணர்வும் இன்றைய எந்த வாடகைத்தாய்மார்களுக்கும் இல்லை.
இதை மனநிலை மாற்றம் என்பதா?
பொருளாதரம் தின்று செரித்துவிட்ட உணர்வுகள் என்பதா?

இரத்ததானம் செய்வது போலவே விந்துதானமும் கருமுட்டைதானமும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அறிவியல் பூர்வமாக அவர்கள் வாதத்தை உடைப்பது எளிதல்ல எனினும்
தன்னுடைய கண்,
தன்னுடைய உதடு
தன்னுடைய புன்னகை
தன்னுடைய நடை
தன்னுடைய நிறம்
தன்னைப் போலவே அச்சு அசலாக இன்னொரு உயிர்..
தன்னை தன் பரம்பரை விதையை தன்னுள் சுமந்து கொண்டு
தன் பரம்பரை சங்கிலியாய் இந்தப் பிரபஞ்சத்தின் உயிரணுவில் கலந்து.. நிற்கும்போது
அந்த உயிருக்கும் அந்த உயிரின் விதைக்கும் உள்ள தொடர்பு..
வெறும் இரத்ததானம் அல்ல.
அதற்கும் மேலான ஒன்று.

பலகோடிக் கணக்கில் செலவு செய்து மக்கள்தொகை அதிகமுள்ள இந்திய சந்தையில் திறக்கப்பட்டிருக்கும் இந்த விந்து வங்கிகள் விந்துதானம், கருமுட்டைதானம், வாடகைத்தாயின் தியாகம் என்ற அறச்சிந்தனைகளைப் புறந்தள்ளி எல்லாம் உலகச் சந்தையில் விற்பனைக்கே
என்ற விற்பனைச் சந்தையைக் கடைவிரித்திருக்கின்றன.

குழந்தை இல்லாத தம்பதிகள் அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற
விழுமியங்கள் எல்லாம் கடந்த காலமாகிவிடும்.

இங்கே இனி எல்லாமே விற்பனைக்குத்தான்.


Cryos International - India Pvt. Ltd.
Address :

209, Marathon Max, LBS-Link Road Junction,
Mulund (West), Mumbai - 400080
INDIA
Tel. : +91-22-25683998, +91-9322404849 +91-22- 2292 6264
Fax. : +91-22 2562 1308
E-mail : in@cryosinternational.com
Website : www.cryosinternational.com